Wednesday 15 February 2017

சேலம் கோட்ட வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் ரயில்களில் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களது உத்தரவின் பேரில் சேலம் கோட்டத்தின் பல்வேறு ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் பயணச்சீட்டு பரிசோதனைகளின் தொடர்ச்சியாக, நேற்று (14.02.2017) சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயில், காரைக்கால் பங்களூரு பயணிகள்க ரயில், பிலாஸ்பூர் எர்ணாகுளம் விரைவு ரயில், திருவனந்தபுரம் கோரக்பூர் விரைவு ரயில், ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில், போன்ற ரயில்களில், சேலம் கோட்ட  வணிக மேலாளர் திரு. கே. மது அவர்கள் தலைமையில் 20 பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் 3 ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கொண்ட குழு திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டது. இதில் 331 பேர் பயணச்சீட்டு இல்லாமலும் 16 பேர் கட்டணம் செலுத்தாமல் சரக்குகளை எடுத்துச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 1,40,730/- ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 1989;ம் ஆண்டு இந்திய ரயில்வே சட்டம்  138வது பிரிவின் படி தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சரக்குகளை தங்களுடன் எடுத்துச் செல்வதும், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பயணிகள் கேட்டுக் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Tuesday 7 February 2017

சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையம் திறப்பு

 சேலம் ரயில்நிலைய நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் உதவிமையம்


சேலம் ரயில்நிலையத்தின் 3/4 நடைமேடைகளில் உள்ள பயணிகள் உதவிமையம்

சேலம் ரயில் நிலையத்திற்கு வந்து போகும் பயணிகளுக்கு உதவ, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள், சேலம் கோட்ட வணிக ஒருங்கிணைப்பு மேலாளர் திரு விஜுவின் அவர்கள் தலைமையில் உதவி வணிகமேலாளர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள், நிலைய மேலாளர்கள், நடைமேடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (07.02.2017) சேலம் ரயில்நிலையத்தில் பயணிகள் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.  இந்த உதவி மையங்களில் பயணிகளுக்கு தேவையான ரயில்கள் மற்றும் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்த தகவல், ரயில்பெட்டிகளின் பராமரிப்பு, கழிப்பறைகள் தூய்மை, உணவு வசதிகள், வீல்சேர் வசதி, போர்ட்டர் வசதி போன்ற அனைத்து உதவிகளும் உடன் வந்து நேரில் செய்து தரப்படும். இது தவிர பயணிகள் ரயில்கள் பற்றிய தகவல் அறிய, சேலம் ரயில் நிலைய நுழைவு வாயில் (சுரங்கப்பாதை இறங்கும் இடத்தின் அருகே) மற்றும் நடைமேடை எண்கள்.3 மற்றும் 4ல் (சுரங்கப்பாதை மேலேறும் இடத்தில்) அமைந்துள்ள இந்த மையங்களின் அருகே தொடுதிரை தகவல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பயணிகள் வசதி மையங்கள் விரைவில் சேலம் கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்நிலையங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று திரு. வர்மா தெரிவித்தார். 

ரயில்பயணிகள் தங்களது உதவிக்காக இத்தகு உதவி மையங்கள் சேலம் ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.