Thursday 1 June 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் லெவல் கிராசிங் விழிப்புணர்வு வாரம்








இந்திய ரயில்வேயில் விழிப்புணர்வு குறைவு காரணமாக லெவல் கிராசிங்குகளில் பெரும் விபத்துக்களும் அதன் காரணமாக ஏற்படும் உயிர் மற்றும் பொருட் சேதங்களையும் தவிர்க்க மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ்பிரபு அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச லெவல் கிராசிங் தினம் உலகெங்கும் ஜுன் 2ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் 29.05.2017 முதல் 02.06.2017 வரை லெவல் கிராசிங் விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து வருகிறது.

இத்தருணத்தில் சேலம் கோட்ட பாதுகாப்புப் பிரிவு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 29.05.2017 அன்று வாழப்பாடி பேருந்து நிலையத்திலும் மின்னாம்பள்ளி வாராந்திர சந்தையிலும், விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்தப் பட்டன. 30.05.2017 அன்று சேலம் சின்ன சேலம் தடத்தில் உள்ள 17 ஆளியக்கமற்ற லெவல் கிராசிங் மற்றும் 1 ஆளியக்கும் லெவல் கிராசிங்கில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. 31.05.2017 அன்று சேலம் விருத்தாலம் தடத்தில் உள்ள லெவல் கிராசிங் எண்.172, 174 மற்றும் 175ல் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை வீர்ர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அது போலவே 01.06.2017 அன்று கரூர் திண்டுக்கல் தடத்தில் உள்ள லெவல்கிராசிங்குகளில் ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகளை பாதுகாப்பாக கடப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.


சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் சேலம் கோட்டத்தில் மொத்தம் உள்ள 72 ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகளில், கடந்த ஆண்டில் (2016-17)  22 லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 50 லெவல் கிராசிங்குகளில், 23 இந்த ஆண்டில் (2017-18)  மூடப்பட்டு விடும் என்றும், 2018 இறுதிக்குள் அனைத்து ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகளும் சுரங்கப்பாலங்கள் கட்டியோ அல்லது ஆள் நியமனம் செய்யப்பட்டோ, சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.   பொதுமக்கள் ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகளை பாதுகாப்பாக கடப்பதன் மூலம் விபத்துக்களை குறைக்க ரயில்வேக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.