Tuesday 21 June 2016

சேலம் கோட்டத்தில் 16வது ரயில்வே உபயோகிப்பாளர் கலந்தாலோசனைக் கூட்டம்

 திரு ஹரி சங்கர் வர்மா அவர்கள் குத்து விளக்கேற்றுகிறார்.
 ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது
  திரு ஆர்.எஸ்,சின்ஹா உரையாற்றுகிறார்
திரு ஹரி சங்கர் வர்மா உரையாற்றுகிறார்
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்

 






















சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்ற 16வது ரயில்வே  உபயோகிப்பாளர் கலந்தாலோசனைக் கூட்டத்தில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், ஓசூர், மற்றும் கரூரில் இருந்து வந்த உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். அவர்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளும் அதற்கான பதில்களும் கீழே

மேட்டுப்பாளையம்
திரு ராஜேந்திரன் அவர்கள் துடியலூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ரயில்நிலையங்களை மேம்படுத்தி அவற்றில் அனைத்து  வசதிகளையும செய்து தர கோரிக்கை வைக்கப்பட்டபோது, கோட்ட  மேலாளர் தற்போது அந்த ரயில்நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும், புதிய கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும்  தெரிவித்தார்.  மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து  வந்திருந்த உறுப்பினர்களிடம், தமிழக அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி மேட்டுப்பாளையம் ரயில்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைமேடை அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொண்டார். 

கோயம்புத்தூர்
திரு சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் கோயம்புத்தூர் பங்களூரு இடையே விரைவு ரயில் இயக்க நீண்ட நாள் கோரிக்கை இருப்பது பற்றி குறிப்பிட்ட போது, கோட்ட மேலாளர் முன்னமே இது பற்றி வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சாதகமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பதிலளித்தார்.  பீளமேடு ரயில் நிலையத்தினை மாதிரி ரயில்  நிலையமாக மேம்படுத்துவது பற்றிய கேள்விக்கு, இது குறித்து ஏற்கனவே திட்ட வரைவு உள்ளதாகவும், அங்குள்ள நிறுவனங்களிடம் நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் அதற்கான நிதி பெறுவதற்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.  வடக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தை சேரன் விரைவு ரயில்  போன்ற ரயில்கள் வந்து செல்லும் நிறுத்தமாக மாற்றுவது குறித்து கேட்ட போது, திரு. வர்மா அங்குள்ள சரக்கு முனையத்தை இருகூருக்கு மாற்றினால்தான் இது சாத்தியம்  என்றும்  அவ்வாறு மாற்றுவதற்கு அங்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால், அவர்களுடன் உள்ளூர் வாசிகள் மூலமாக பேசி சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டார்.  கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் மாற்றுத்திற்னாளிகளுக்கான வசதிகள் போதாமல் இருப்பது பற்றிய கேள்விக்கு திரு.வர்மா, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் கோயம்புத்தூர் ரயில்நிலையத்தில் உள்ள வசதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும்  விரைவிலேயே கோயம்புத்தூர் ரயில்நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் ரயில்நிலையமாக விளங்கும்  என்றும் சொன்னார்.  பேட்டரி மூலம் இயங்கும் கார்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தால் உடனடியாக அனுமதி தரப்படும் என்றும் அவர் சொன்னார். 

திருப்பூர்
திரு ஜே வி சுரேஷ் குமார் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் இயக்க கோரிக்கை  வைத்த போது, அத்தகு கார்களை வழங்க நிறுவனங்கள் முன் வந்த  போதிலும், அந்த கார்களுக்கான இயக்குநர்களின் மாதாந்திர ஊதியம் வழங்க தயங்குவதாகவும், மற்ற ரயில் நிலையங்களில் உள்ளதுபோன்று ரோட்டரி போன்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் ஊதியம் வழங்க முன்வந்தால் இப்பிரச்சனை தீர்க்கப்பட்டு விடும் என்றும்சொன்னார்.  குளிர்வசதி செய்யப்பட்ட பல படுக்கையறை விரைவில் திருப்பூரில் நிறுவப்படும் என்றும் தற்போது செய்யப்பட்டு வருவதுபோன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெரிவித்தார். 

திரு சபாபதி  அவர்கள் கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட  போது, அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்ட மேலாளர் உறுதியளித்தார். மேலும் சரக்குகளை ஏற்ற வசதியாக விரைவு ரயில்களை 5 நிமிடம்  வரை திருப்பூரில் நின்று செல்ல ஏற்பாடு  செய்யுமாறு கேட்ட போது, தற்போது 8 ரயில்களுக்கு அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுமேலும் பல ரயில்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றும் சொன்னார். 

ஈரோடு
திரு என்.சிவநேசன் அவர்கள் பேட்டரி மூலம் இயங்கும் கார்களை இயக்க கோரிக்கை வைத்த போது, முன்னர் குறிப்பிட்டது போல கார்கள் மற்றும் இயக்குநர்களின் ஊதியத்தை ஏற்க நிறுவனங்கள் முன் வந்தால் இது உடனடியாக சாத்தியம் என்று சொன்னார்.  முன்பதிவற்ற ரயில்  பெட்டிகளில் மொபைல் சார்ஜ்  செய்ய வசதி செய்து தருமாறு கேட்ட போது, சேலம் கோட்டத்தில் உள்ள ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும்  அனைத்து ரயிலகளிலும் இந்த வசதி உடனடியாக செய்யப்படும் என்று பதிலளித்தார்.  பெருந்துறை ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து  சிப்காட்  வரை புதிய ரயில்பாதை அமைப்பது  பற்றி கேட்டபோது இது பற்றி சிப்காட் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், பதிலுக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.  மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் முன்பதிவு பெட்டியில்லாத விரைவு ரயிலகளில் முன்பதிவு ரயில்பெட்டிகளில் ஏறினால், பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து  கொள்வது பற்றிய புகாருக்கு, திரு. வர்மா பயணிகளிடம் பணிவாக நடந்து கொள்ள ஏற்கனவே அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை  மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  ஆனால், முன்பதிவு பெட்டிகளில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் ஏறி அங்குள்ள பயணிகளுக்கு தொல்லை தராமல் இருப்பது நல்லது என்றும் சொன்னார். 

திரு  கௌதமன் அவர்கள் கோயம்புத்தூர் சென்னை இன்டர்சிடி, கோவை விரைவுரயில் போன்ற ரயில்களில் இருக்கைகள் பழுதாகியுள்ளதாகவும், ஏற்காடு விரைவு ரயிலில் கழிப்பறைகளில் உள்ள குழாய்கள் மற்றும் பிட்டிங்குகள் உடைந்து போயிருப்பதாகவும் குறிப்பிட்டபோது அவை மாற்றப்படும் என்று  கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.  சேலம் விருத்தாசலம் பயணிகள் ரயிலை ஈரோடு வரை நீட்டிக்கும் கோரிக்கை வைத்தபோது, தற்போது ஒரு ரயில் தொடர் மட்டுமே இருப்பதால், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால் தற்போது  அவ்வாறு செய்ய இயலாது என்று சொன்னார். 

சேலம்
திருஎம். துரைராஜ் அவர்கள் சேலம் சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்க கோரிக்கை வைத்தபோது, ஏற்கனவே  இது குறித்து வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது பரிசீலனையில் உள்ளதாகவும் சொன்னார்.  தமிழக அரசின் அம்மா குடிநீர் விலை குறைவாக உள்ளதால், ரயில் நிலையங்களில் அவற்றை விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும் என்று அவர் கேட்ட போது, அது போன்ற கொள்கை முடிவுகளை ரயில்வே  வாரியம் மட்டுமே எடுக்க இயலும் என்று பதிலளித்தார். 

திரு ஜெயசீலன் அவர்கள் சேலம் எழும்பூர் விரைவு ரயிலை சேலம் மார்க்கெட்ரயில் நிலையத்தில் நின்று செல்ல  வேண்டுகோள் விடுத்த  போது  அது பரிசீலிக்கப்படும் என்று சொன்னார்.  ரயில்பெட்டிகள்  அவற்றிற்கான குறிப்பிட்ட இடங்களில் நிற்காமல் தள்ளி நிற்பதால் முதியவர்கள் அவதிப்படுவதாக சொன்னபோது அது சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார். 

திரு அத்தியண்ணா அவர்கள், இரவு நேரங்களில் சேலம் ரயில்நிலையத்தில் வீல்சேர்கள் கிடைப்பது கடினமாக இருப்பது பற்றி குறிப்பிட்ட போது, அனைத்து நேரங்களில் வீல்சேர்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று திரு வர்மா உறுதியளித்தார்.  மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை தபால் மூலம்  பெற ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்ட போது, அவை தவறான நபர்களில் கைகளில் கிடைக்க வாய்ப்புள்ளதால், சேலம் கோட்ட அலுவலகத்தின்  வெளியே, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி  மையங்களில் குறிப்பிட்ட  நாட்களில் அடையாள அட்டைகளை பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்  என்று சொன்னதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில பெட்டிகளில் கழிவறைகள் சுத்தமாக பராமரிப்பது உறுதி செய்யப்படும்  என்றும்சொன்னார். 

ஓமலூரில் அதிக  ரயில்கள் நின்று செல்லவும், ரயில்  பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, பயணிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்படும்  என்று கோட்ட மேலாளர் உறுதியளித்தார். 

நாமக்கல்
திருமதி தமிழரசி யோகம் அவர்கள் நாமக்கல் ரயில் நிலையத்தை அணுகும் பாதை மோசமாக இருப்பதாக குறிப்பிட்ட போது  அது சரிசெய்யப்படும் என  உறுதியளித்த திரு வர்மா, பழனி சென்னை ரயிலில் இரவுநேரங்களில் ரயில்பெட்டிகள் உள்ளிருந்து பூட்டப்படுவதால் பயணிகள் ரயிலில் ஏற முடியவில்லை என்று சொன்ன போது, பயணச்சீட்டு பரிசோதகர்கள் அதனை கண்காணிக்க ஆணை பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்தார். 

கரூர்
திரு  வி.என். மோகன் அவர்கள் கரூர் ரயில்நிலையத்தில் நடைமேம்பாலத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஏறிச் செல்ல கடினமாக இருப்பது பற்றி குறிப்பிட்ட்ட  போது, விரைவிலேயே கரூர் ரயில்நிலையத்தில் மின்தூக்கி (lift) அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.  பழனி சென்னை விரைவு ரயில் கரூரில் அதிகாலை  வருவதால், பெண்பயணிகளுக்கு கடினமாக இருப்பது பற்றி குறிப்பிட்டபோது, சென்னை சென்ட்ரலில் வந்து சேரும் ரயில்களின் நேரத்தின் அடிப்படையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பதால் சென்னை கோட்டம் தான் இது பற்றி நடவடிக்கை எடுக்க முடியும்  என்று சொன்னார். 

கரூர் ரயில்நிலையத்தில் 3 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் ஒரே இடத்தில் இருப்பது பற்றி குறிப்பிட்ட போது, அவற்றுள் ஒன்று மறுபக்கம் மாற்றப்படும் என்று திரு வர்மா சொன்னார்.  சூரிய ஒளி  காரணமாக அங்குள்ள மின்னணு தகவல் பலகைகளை படிப்பது கடினமாக இருப்பது குறித்து சொன்ன போது  அவற்றை எதிர்புறம் மாற்ற ஆணை பிறப்பித்தார். 

பின்னர் உறுப்பினர்களிடையே பேசுகையில், பயனுள்ள பல கருத்துக்களை முன்வைத்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  சேரன் மற்றும் கொங்கு விரைவு ரயில்களில் கழிவறைகள் மற்றும்  படுக்கை விரிப்புகள் பற்றி பல  புகார்கள் வந்த்தால் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.    ரயில்நிலையங்களில் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்க்க் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை10ம் தேதிக்கு பிறகு அவ்வாறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிம்ம் ரத்து செய்யப்பட்டு அவர்களது கடைகள் மூடப்படும் என்று சொன்னார்.   அத்தகு நடவடிக்கைகள் காணப்பட்டால், உடனடியாக சேலம் கோட்ட வணிகத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு அதை கொண்டு வருமாறு அவர்  உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.  

மேலும், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும், ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  நிதி உதவி பெற்றுத் தருமாறு கேட்டுக்  கொண்டார்.  மேலும் அவர்களுக்கு தெரிந்த தனியார் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நிறுவன சமூக மேம்பாட்டுப் பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற ரயில்வேக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.  அத்தகு பணிகளின் பட்டியலையும் அவர்களுக்கு வழங்கினார். 


முன்னதாக, சேலம்கோட்ட  ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின், வரவேற்புரை வழங்கினார்.  சேலம்  கோட்ட கூடுதல் மேலாளர் திரு ஆர்.எஸ்.சின்ஹா அவர்கள் சேலம் கோட்டத்தில் நடைபெற்றுவரும் மேம்பாடுகள் குறித்து  விளக்கினார். கூட்ட நிறைவில் சேலம் கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் திரு ஈ. ஹரிகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.  

Wednesday 15 June 2016

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரயில்வே அமைச்சகம் பயண விதிகளில் மாற்றம்


தற்போது, மாற்றுத்திறனாளிகள் ரயில்களில் பயணம் செய்யும் போது, அவருடன் பாதுகாவலர் ஒருவர் பயணித்தால் மட்டுமே, பயணச்சீட்டு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவும் பொருட்டு ரயில்வே அமைச்சகம் விதிகளில் மாற்றம் செய்து அவர்கள் பாதுகாவலர் உடன் பயணம் செய்யாத போது கூட அவர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய வழி செய்துள்ளது. தற்போதுள்ள சலுகைக்கான தகுதி விதிமுறைகளில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய விதிகள் இன்று (15.06.2016) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால், உடன் பயணிக்கும் பாதுகாவலருக்கும் சேர்த்து பயணச்சீட்டு வாங்கும் கட்டாயம் இனிமேல் இருக்காது.  

Friday 10 June 2016

2018 இறுதிக்குள் சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகள் முற்றிலுமாக நீக்கப்படும், 2016-17ம் ஆண்டில் சேலம் கோட்டத்தில் லெவல் கிராசங்குகளில் விபத்துகள் முற்றிலும் தவிர்ப்பு – சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி

கோட்ட மேலாளரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
 சர்வதேச லெவல்கிராசிங் விழிப்புணர்வு தினம்
ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்


இன்று சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாளையொட்டி, சேலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, 2018 இறுதிக்குள் சேலம் கோட்டத்தில் உள்ள 72 ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்குகள் ஆளியக்கம், தரைக்கீழ்ப்பாலம், தரைமேம்பாலம் கட்டுவதன் மூலமாக முற்றிலுமாக நீக்கப்படும், என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தெரிவித்தார். அவற்றுள், 53 லெவல் கிராசிங்குகள் இந்த ஆண்டிலும் 19 அடுத்த ஆண்டிலும் மூடப்படும் என்றும் தெரிவித்த அவர், இந்த ஆண்டில் இதற்காக 6 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான அளவு நிதி கிடைத்தால், அடுத்த ஆண்டுக்கான வேலைகள் இந்த ஆண்டிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 

15  லெவல் கிராசிங்குகளில் அதற்கான கட்டுமானப் பொருட்கள் தயாராக இருப்பதாகவும், சேலம் விருத்தாசலம் மற்றும் சேலம் திண்டுக்கல் தடங்களில் 2 லெவல் கிராசிங்குகளை மூட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகவும் சொன்ன அவர், 2015-16ம் ஆண்டில் சேலம கோட்ட பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் லெவல் கிராசிங் விபத்துகள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், நீலகிரி மலைரயில் பாதையில் யானைகள் நடமாட்டத்தினார் விபத்து ஏதும் நடைபெறாமல் இருக்க வனத்துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சேலம் ரயில்நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையை அகலப்படுத்த சேலம் மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது சேலம் ரயில்நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில்களை சேலம் டவுன் ரயில்நிலையம் வரை நீட்டிப்பது பற்றிய கேள்விக்கு, சேலம் டவுன் ரயில்நிலையத்தில் தற்போது வசதிகள் குறைவாக இருப்பதால் அது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்று பதிலளித்தார்.  சேலம் சென்னை இடையே பகல் நேர விரைவு ரயில், கோயம்புத்தூர் பங்களூரு இடையே இரவு நேர விரைவு ரயில் புதியதாக இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சொன்னார். 

ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்போர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலில் எச்சரிக்கை, பின்னர் அபராதம் போன்றவை விதிக்கப்பட்டு அதன்பிறகும் பிரச்சினை தொடர்ந்தால் அந்த வணிகரின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அங்கீகாரமற்ற விற்பனையாளர்களின் நடமாட்டத்தை தவிர்க்க உரிமதார்ர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விற்பனையாளர்களை நியமிக்க அனுமதி தரப்பட உள்ளதாகவும் சொன்னார்.  ரயில்நிலையங்களில் வழங்கப்படும் உணவின் தரம் கடுமையாக கண்காணிக்கப்படுவதாகவும், கலப்படம் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால், அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்றவற்றுடன் கலப்படத் தண்டனைச்சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவ்வாறு தவறு செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு. வர்மா சொன்னார். 

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் திரு ரவி சேகர் சின்ஹா, கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் மா. விக்னவேலு, மற்றும் கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி திரு ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.  

Thursday 9 June 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 4 முக்கிய ரயில்நிலையங்களில் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஜனனி சேவை மையம் திறப்பு

 ஜனனி சேவை மையம்
 கரூர்
 கோயம்புத்தூர்
ஈரோடு
சேலம்

குழந்தைகளுடன் ரயில்களில் பயணம் செய்யும் பெற்றோர்களுக்கு ரயில்களில் அவர்களுக்கான உணவு கிடைப்பதில் உதவும் பொருட்டு இந்திய ரயில்வே அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ஜனனி சேவை என்றழைக்கப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள் விற்பனை செய்யும் ஜனனி சேவை மையங்களை துவக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந் நடவடிக்கை சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு டிவிட்டரில் மாண்புமிக மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு அவர்களை கேட்டுக் கொண்ட பின்னர் உருவான திட்டமாகும், இது குறித்து ரயில்வே அமைச்சர் அவர்கள் தனது 2016 ரயில்வே பட்ஜட் உரையின் போதும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.   அதன்படி இத்திட்டம் இப்போது செயலாக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டத்தில் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் ரயில்நிலையங்களில் உள்ள சைவ உணவகங்களில் இன்று ஜனனி சேவை மையங்கள் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன.  இங்கு செரிலாக், லாக்டோஜன், போன்ற குழந்தைகள் உணவுகளுடன், சூடான பால், வெந்நீர் மற்றும் பால்புட்டிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் 5 முதல் 12 வரை உள்ள சிறார்களுக்கான சிற்றுண்டிகளும் தேவையின் அடிப்படையில் கிடைக்க வழி செய்யப்படும். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா இத்தகு நடவடிக்கைகள் ரயில்பயணிகளுக்கு உதவுவதுடன் அவர்களின் பயணத்தை இனிமையானதாக்கும் என்றும், மேலும் இது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.  

Sunday 5 June 2016

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இன்று (05.06.2016), தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம், மரக்கன்றுகள் நடுதல், ரயில்வே ஊழியர்களிடம் கலந்தாலோசனை

 உலக சுற்றுச்சூழல் தினம்
 திரு ஹரிசங்கர் வர்மா  அவர்கள் அதிகாரிகளுடன் உரையாடுகிறார்
 குடியிருப்பில் மரம் நடப்படுவதை திரு வர்மா பாராட்டுகிறார்
 குடியிருப்புவாசிகள் மரம் நடும் காட்சி
 ஒரு ஊழியர் மரம் நட திரு வர்மா உதவும் காட்சி
திரு வர்மா அவர்கள் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை குடியிருப்பு வாசிகளிடம் வழங்குகிறார்

உலக சுற்றுப்புற நாளை முன்னிட்டு, இன்று (05.06.2016) தெற்கு ரயில்வே  சேலம் கோட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம்  ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா அவர்கள் தலைமையில் சேலத்தில் உள்ள ரயில்வே குடியிருப்புகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. புவி வெப்பமாவதன் விளைவுகள் பற்றியும், மின்சாரம் சேமிக்க பழைய மின்சார பல்புகளுக்கு பதிலாக குறுங்குழல் மற்றும் எல்ஈடி விளக்குகள் பயன்படுத்துவதன் அவசியம் பற்றியும், பெருமளவில் மரங்களை நட்டு அவற்றை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பொது  இடங்களில் மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் குப்பை போடாமலிருப்பதன் அவசியம் குறித்தும், ரயில்வே குடியிருப்புகளை தூய்மையாக பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

திரு வர்மா அவர்கள் ரயில்வே குடியிருப்பு வாசிகளிடம் கலந்துரையாடிய போது, காலனி அருகில் இறந்தவர்களை எரிக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்து வெளிப்படும் புகை மற்றும் நாற்றம் தங்களது உடல்நலனுக்கு கேடு விளைவிப்பதாக இருப்பதாகவும் அவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. திரு வர்மா  அவர்கள் புகையினால் ஏற்படும் கெடுதல்களை தவிர்க்க உடனடியாக காலனியின் சுற்றுச்சுவர்களின் உயரத்தை அதிகரித்து, அங்கு உயரமாக வளரும் மூங்கில் போன்ற மரங்களை வளர்க்குமாறு ஆணை பிறப்பித்தார். மேலும், சேலம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அங்குள்ள சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுகோள் கடிதம் அனுப்பப்படும் என்றும் உறுதி அளித்தார்.  பிரச்சாரத்தில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. ரவி சேகர் சின்ஹா, கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு மா. விக்னவேலு, கோட்ட  ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின், கோட்ட முதுநிலை நிதி மேலாளர் திரு பி, கம்பன், கோட்ட  முதுநிலை இயக்க மேலாளர் திரு ஈ ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு ரயில்வே காலனியில் இன்று சுமார் 70 மரக்கன்றுகள் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் முன்னிலையில் இதர அதிகாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகளால் நடப்பட்டன. திரு வர்மா  அவர்கள் ரயில்வே குடியிருப்பு வாசிகளை ஒவ்வொரு வீட்டிலும் சில மரங்கள் மற்றும் செடிகளை நட்டு பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

பின்னர், செய்தியாளர்களுடன் உரையாடுகையில், திரு வர்மா அவர்கள் இந்திய ரயிலவே சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், ரயில்நிலையங்கள் உள்ளிட்ட ரயில்வே இடங்களை  சுத்தமாக பராமரிக்கவும், ரயில்வே வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மக்க்க்கூடிய சுற்றுச்சூழலை பாதிக்காத தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், சேலம் கோட்ட  ஊழியர்கள் இக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருப்பதாகவும்  தெரிவித்தார்,. 

Wednesday 1 June 2016

பயணிகள் சேவை வாரவிழாவின் ஏழாவது நாளான இன்று மக்கள் தொடர்பு தினம் அனுசரிப்பு சேலம் ரயில்நிலையத்தில் குளிர்வசதி தங்கும் அறையை சேலம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் திறப்பு


மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பின்ர் அவர்கள் தங்கும் அறையை திறந்து வைக்கிறார்
கோட்ட மேலாளர் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடுகிறார்
இடமிருந்து வலம் மாண்புமிகு சேலம் மேயர் மாண்புமிகு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர்
ரயில்வே  கோட்ட மேலாளர் திரு பன்னீர் செல்வம்  அவர்களை வரவேற்கிறார்
மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கோட்டமேலாளருடன் கலந்தாலோசிக்கிறார்
நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிடுகிறார்

மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கோட்டமேலாளரை சந்திக்கிறார்

புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் நடைமேம்பாலத்தை மூத்த நிலைய ஊழியர் திரு ராஜு திறந்து வைக்கிறார்
புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நடைமேம்பாலம்

இந்திய ரயில்வேயில் பயணிகள் சேவை வாரவிழாவின் ஏழாவது நாளான இன்று மக்கள் தொடர்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று சேலம் ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்ட குளிர்வசதி பயணிகள் தங்கும் அறையை மாண்புமிகு சேலம் பாராளுமன்ற உறுப்பினர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் சேலம் மாநகர மேயர் திரு சவுண்டப்பன் அவர்கள், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா மற்றும் சேலம் கோட்ட அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.


இந்த குளிர்வசதி கொண்ட பயணிகள் தங்கும் அறையில் 36 பேர் அமர இடவசதி உள்ளது. மதுரையை சேர்ந்த ஏஜேபி நிறுவனத்தினருக்கு 3 ஆண்டுகளுக்கு 10.5 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 15 ரூபாய் தங்கும் கட்டணமாக வசூலிக்கப்படும். இங்கு கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 150  பேர் தங்குவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தங்கும் அறையை திறந்து வைத்த பின்னர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் 3/4 பிளாட்பாரங்களில் உள்ள நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். அவர் கோட்ட  மேலாளருடன் சேலத்தில் உள்ள பல்வேறு ரயில்வே பற்றிய விஷயங்களை விவாதித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம்  பேசிய திரு ஹரிசங்கர் வர்மா சேலம் நகர் மையநகரமாக உள்ளதால், சேலம் ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கிச் செல்ல உதவியாக இருக்கும் என்றும், குத்தகைதாரர் பயணிகளுக்கு தேவைப்படும் போது, காபி,தேனீர் மற்றும் இதர உணவுப் பொருட்களை வாங்கித் தருவார் என்றும் தெரிவித்தார்.  சேலம் கோட்ட ரயில் நிலையங்களில்  சுத்தம் கடுமையாக கண்காணிக்கப் படுவதாகவும், உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவது சோதனை செய்யப்படுவதாகவும் சொன்னார்.  மேலும் அதிகமான பயணிகள் தங்கும் விதமாக, குளிர் வசதி செய்யப்பட்ட தங்கும் அறை மேலும் விரிவாக்கப்பட  உள்ளதாகவும்  தெரிவித்தார். 

தற்போதுள்ள சேலம் ரயில்நிலைய நுழைவுவாயில் வாகனப் போக்குவரத்து காரணமாக பயணிகள் வந்து செல்ல வசதியாக பின்புறம் ஒரு நுழைவுவாயில் உருவாக்கப்பட உள்ளதாகவும், இன்னும்12 முதல் 18 மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்றும்  திரு  வர்மா சொன்னார்.  சேலம் சென்னை இடையே விரைவு ரயில் ஒன்று காலை சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்று மாலையில் சேலம் திரும்பும்  படி இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், இது  குறித்து மாண்புமிகு சேலம் பாராளுமன்ற  உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு ரயில்வே அமைச்சரை  சந்தித்த போது ரயில்பெட்டிகள் பற்றாக்குறை பற்றி விளக்கியதாகவும் சொன்ன அவர், இது குறித்து தலைமை அலுவலகத்துடன் தொடர்ந்து கடிதப்போக்குவரத்து மேற்கொள்ளப்படும்  என்றும் அவர்  சொன்னார். 

நீலகிரி மலை ரயில் பகுதியில் கூடுதல் ரயில்கள் இயக்குவதுபற்றி  கேட்டபோது, மலைப்பகுதி மிகவும் செங்குத்தாக இருப்பதால், கூடுதல் ரயில்கள் இயக்க தற்போதுள்ள ரயில் எஞ்சின்களைக் கொண்ட  இயலாது,  சேலத்தில் இருந்து மற்றும் சேலத்திற்கு ஜோலார்பேட்டை, கோயம்புத்தூர் மற்றும்  ஈரோடு போன்ற இடங்களுக்கு பயணிகள் ரயில்களை நீட்டிப்பது பற்றி கேட்ட போது, தற்போது சேலத்தில் ரயில்பெட்டிகள் பராமரிப்பு பணிமனை இல்லை என்றும், அதற்கு பெரிய  அளவில்  இடம்தேவைப்படும் காரணத்தால், தற்போதைக்கு அதற்கு சாத்தியம் இல்லை என்றும், மேற்கொண்டு பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

சேலம் கோட்டத்தில் வைபை இணையதள இணைப்பு அமைப்பது குறித்து கேட்கப்பட்ட  போது, கோயம்புத்தூரில் விரைவில் ரயில்டெல் மற்றும்  கூகுள் நிறுவனங்களின் ஒத்துணைப்புடன் இலவச இணையதள சேவை வழங்கப்படும் என்றும், சேலத்தில் தற்போது அத்தகைய திட்டம்  ஏதும் இல்லாததால், குளிர்வசதி செய்யப்பட்டுள்ள தங்கும்  அறையில் கட்டண  அடிப்படையிலான இணையதள வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

சேலம் கோட்டத்தில் உள்ள புட்டிரெட்டிபட்டி ரயில்நிலையத்தில் பயணிகள் தண்டவாளங்களை எளிதாக கடந்து செல்ல வசதியாக புதியதாக  அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை புட்டிரெட்டிபட்டி ரயில்நிலைய மூத்த ஊழியரான ராஜு அவர்கள், சேலம்  கோட்ட முதுநிலை ஒருங்கிணைப்பு பொறியாளர் திரு. மா. விக்னவேலு  மற்றும்சேலம்கோட்ட பொறியாளர் திரு. மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நடைமேம்பாலம் 1.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

இன்று மாண்புமிகு ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு எஸ்.செல்வகுமார சின்னையன் அவர்கள் சேலம்கோட்ட  மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மாவை சேலத்தில் சந்தித்து ஈரோட்டில் மேற்கொள்ளப்பட வேணடிய பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.  அவர் முன்வைத்த கோரிக்கைகளான விரைவு ரயில்களை கொடுமுடி ரயில்நிலையத்தில் நிறுத்துவது, ஈரோடு பழனி அகல ரயில்பாதை திட்டத்தை மேற்கொள்வது, ஈரோடு ரயில்நிலையத்தில் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது, ஈரோடு ரயில்நிலையத்தில் மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டுகள் அமைப்பது போன்ற மேம்பாடுகளுக்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும், ஜூன் மாத நடுவில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் ஒருங்கிணைந்து ஈரோடு ரயில் நிலையத்தை மேற்பார்வையிட  வருவதாகவும் உறுதியளித்தார்.