Friday 20 January 2017

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த கருத்தரங்கு

திரு ஹரிசங்கர் வர்மா உரையாற்றுகிறார்
திரு சத்யகுமார் அவர்களின் உரை
திரு ராஜ்குமார் அவர்களின் வரவேற்பு உரை
 திரு சந்திரபால் அவர்கள் பேசுகிறார்
கருத்தரங்கில் கலந்து கொண்டோர்

ரயில்களை பாதுகாப்பாக விபத்துகள் இன்றி இயக்க, இந்திய ரயில்வே தனது கீழ்மட்ட ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும் இது குறித்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்று (20.01.2017),  தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், ரயில்வே வாரிய செயல் இயக்குநர் திரு. ஜி.வி.எல் சத்தியகுமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.  கருத்தரங்கில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. ஹரிசங்கர் வர்மா, கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் திரு சந்திரபால், மற்றும் பிறதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இயந்திரவியல், மின்னியல், இயக்கவியல் துறைகளின் பொறுப்பு அதிகாரிகள் பாதுகாப்பான ரயில் இயக்கம் குறித்து உரையாற்றினர்.  

திரு சத்தியகுமார் அவர்கள் பேசுகையில், ரயில் விபத்துகள் திடீரென ஒரு நாள் நடக்கும் நிகழ்வல்ல, பல நாட்கள் சோதனை செய்யாதிருத்தல், பல நாட்கள் பராமரிக்காதிருத்தல், போன்ற குறைபாடுகளின் வெளிப்பாடே என்றும், பராமரிப்புக்கும், பாதுகாப்பான ரயிலியகத்திற்கும் அதிக கவனம் செலுத்தினால் விபத்துக்கள் குறையும் என்றும் குறிப்பிட்டார்.  இக்குறைபாடுகளைக் களைவதால், ரயில்களை நேரப்படி இயக்க முடிவதுடன், ரயில்களின் பாதுகாப்பும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   

திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் தனது உரையில், சேலம் கோட்டம் நேரப்படியான முன்னெச்சரிக்கை ஆய்வுகள் மூலமும், சரியான பராமரிப்பின் மூலமும், விபத்துக்கள் இன்றி ரயில்களை இயக்கும் குறிக்கோளை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், ஒவ்வொருவரும் தங்களது பங்கினை உணர்ந்து பணியாற்றினால், தவறுகள் நடக்காமல் தவிர்க்க முடியும் என்றும் சொன்னார். 

முன்னதாக சேலம் கோட்ட முதுநிலை பாதுகாப்பு அதிகாரி திரு எஸ்/ ராஜ்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு. எம். பிரபாகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

No comments:

Post a Comment