Wednesday 22 March 2017

23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

புதிதாக மாற்றப்பட்டுள்ள பொள்ளாச்சி போத்தனூர் அகல ரயில் பாதையை 23.03.2017 மற்றும் 24.03.2017 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தெற்கு வட்டம் திரு கே.ஏ. மனோஹரன் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளார். இணை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் திரு. ஈ. ஸ்ரீனிவாஸ், தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் திரு. எல். சுதாகர ராவ், தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு தலைமைப் பொறியாளர் திரு. பிரபுல்ல வர்மா, தெற்கு ரயில்வே தலைமை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பொறியாளர் திரு. எல். இளவரசன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் திரு நரேஷ் லால்வானி, போத்தனூர் கட்டுமானப் பிரிவு இணைத் தலைமைப் பொறியாளர் திரு. ஆர், ராமகிருஷ்ணன், ஆகியோருடன், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம், சேலம் கோட்டம், மற்றும் பாலக்காடு கோட்ட அதிகாரிகள், ஆய்வின் போது, அவருடன் பங்கேற்கிறார்கள்.

23.03.2017 அன்று காலை சுமார் 10.30 மணி முதல் மதியம் 3.00 மணிக்குள் பொள்ளாச்சி கிணத்துக்கடவு இடையேயும், 24.03.2017 அன்று காலை சுமார் 10.30 மணி முதல் மதியம் 2.00 மணிக்குள் கிணத்துக்கடவு பொள்ளாச்சி  இடையேயும் மோட்டார் டிராலி மூலம் தடத்தை அவர் ஆய்வு செய்வதுடன், 24.03.2017 அன்று மதியம் சுமார் 03.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் போத்தனூர்  பொள்ளாச்சி  இடையேயும் டீசல் எஞ்சின் மற்றும் ரயில்பெட்டிகள் மூலம் இத் தடத்தில்  அவர் வேகப்பரிசோதனை செய்ய உள்ளார். எனவே இக்குறிப்பிட்ட நேரங்களில் பொது மக்கள் ரயில்தடம் அருகே செல்லாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொள்ளாச்சி போத்தனூர் இடையிலான சுமார் 40 கிமீ தொலைவு கொண்ட பழைய மீட்டர் கேஜ் ரயில்பாதை தற்போது சுமார் 340 கோடி ரூபாய் செலவில் அகலப்பாதையாக 2010ல் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடுமையான பாறைகள் நிறைந்த மலைப்பாதையில் சுமார் 4 கிமீ தூரத்திற்கு கடினமான சூழலில் ரயில்தடம் போடப்பட்டுள்ளது. இத்தடத்தில் தரைமேம்பாலம், மற்றும் தரைக்கீழ்ப்பாலம் உள்பட மொத்தம் 110 ரயில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் முன்பு இருந்த 37 லெவல் கிராசிங் கேட்டுகளில் பெரும்பலானவை மூடப்பட்டு தற்போது 14 லெவல் கிராசிங்குகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் இன்னும் மூன்று மாதகாலத்திற்குள் மேலும் 4 லெவல் கிராசிங்குகளை மூட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் புதிய அகல ரயில் பாதையால் கோயம்புத்தூர், இதர தெற்கு நகரங்களான பழனி, மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டு இந்த இடங்களுக்கு செல்லும் பயண நேரம் பெருமளவில் குறைக்கப்பட வழி வகுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment