Wednesday 2 November 2016

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

திரு சந்திரபால் அவர்கள் கண்காணிப்பு உறுதிமொழியை வாசிக்கிறார்
 ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்
 திரு சந்திரமௌலி அவர்கள் உரையாற்றுகிறார்
விழாவில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதி

நாடெங்கிலும் 31.10.2016 முதல் 05.11.2016 வரை பொது வாழ்வில் தூய்மை மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி, இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, அனுசரிக்கப்பட்டு வரும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக இன்று (02.11.2016) தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சேலம் தமிழக அரசு காவல் துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் திரு. சந்திரமௌலி அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கிய அவர், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் எவ்வாறு கண்காணிக்ப்பட்டு பிடிக்கப்படுகிறார்கள் என்பதையும் விளக்கினார். மேலும், ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட பணம் முதலில் தற்காலிக மகிழ்ச்சி தந்தாலும், பின்னால் அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் துன்பம் உண்டாக்கும் என்று சொன்னார்.

ஏற்காடு மான்ட்போர்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு கே.ஜே. ஜார்ஜ் அவர்கள் பேசுகையில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதில் மட்டுமன்றி, தங்களது அன்றாட பணிகளையும் ஊழல் கறை இன்றி தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று சொன்னார்.  தெற்கு ரயில்வே தலைமையக துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி திருமதி காயத்ரி அவர்களும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

முன்னதாக, சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் திரு சந்திரபால் அவர்கள் ஊழியர்களுக்கு கண்காணிப்பு உறுதிமொழி செய்து வைத்தார்.  சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் திரு பிரபாகரன் அவர்கள் வந்தவர்களை வரவேற்றார்.  சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் திரு விஜுவின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  

No comments:

Post a Comment